Sunday 1 November 2015

உலர்ந்திடா மழை

உலர்ந்திடா மழை
_______________________
இரு வேறு மனோநிலையுடன்
மழையில் பயணப்பட்டிருக்கிறோம்,
வாத்தியக்காரனின் 
தாள லயத்துடன்
கடந்து வந்த தடங்களை
பின்னோக்கி நனைக்கிறது மழை.
சேகரமாகும் உன் நினைவின் துளிகள்
பேராழியின் அனுபவத்தை
என்னுள் கசியச்செய்கிறது..
நீ வெளியேறிச் செல்கிறாய்,
நதியென,
அதன் நனைவித்தல் என,
அதன் மொழியென,
அதன் இரட்சிப்பென,.
தங்கள் பிரியத்தின் ஒலிகளால்
உன்னதத்தை நிரப்பும்
சிறு பறவையின் குரல்கள்,
இன்னமும் உலர்ந்துபோகாத
பசிய தானியத்தின் ஈரத்துடன்
உன் மழையினைத் தருவிக்கின்றன..
___________________________________________________________
2) மிதக்கும் பெருநகரம்
______________________________
தனிமையும் நெருக்கமுமாய்
வசீகரித்துக் கடக்கிறது
பெரு நகரொன்றின் பொழுது,
விளக்குகளின் ஊடே
இந்நகரத்தின் ஒப்பனையோடு
இயைந்தமையாது நகருகிறார்கள்,
யுவன் யுவதிகள்.
அடுக்ககக் கடைகளிலிருந்து  வழியும்
நிறமற்ற தங்கள் கனவுகளுக்கு
மிதக்கும் பொருளொன்றின்
பெயரிடுதலோடு கழிகிறது
நகரின் ஞாயிற்றுத் தடங்கள்,,
ஒளி  சொரியும்  நிலத்தினின்று
விடுபட்டு
இயங்கும் நகரம்,
இருளின்  ஒப்பற்ற  வண்ணத்தை  
பெரு விருப்போடு  பூசிக்களிக்கிறது,
எக்கணமும்
விரைந்த யாத்திரைக்கு
ஒப்புவிக்கப்பட்ட 
நகரின் நீர்த்தாரைகள்,
ஆகாயத்தாமரைகளால் மூடப்பட்டவை,..
______________________

No comments:

Post a Comment